கடலூரை உலுக்கிய வெடிகுண்டு மிரட்டல்.. பல பள்ளிகள், கல்லூரிக்கு விடுமுறை
கடலூர்: கடலூரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து தொலைபேசி மூலம் வந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என போலீஸார் தெரிவித்துள்ளனர். யாராவது மாணவரே இந்தப் புரளியை கிளப்பியிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் கடற்கரை சாலையில் உள்ளது சி.கே. மேல்நிலைப்பள்ளி. இதே நிர்வாகம் செல்லாங்குப்பம் பகுதியில் கல்லூரி ஒன்றையும் நடத்தி வருகிறது. இன்று காலை 7.45 மணிக்கு சி.கே. மேல்நிலைப்பள்ளிக்கு ஒரு போன் வந்தது.
அதை எடுத்துப் பேசிய வாட்ச்மேன் ராஜேந்திரனிடம், கல்லூரியில் குண்டு வைத்துள்ளோம். அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என எதிர்முனையில் பேசியவர் கூறியுள்ளார். ஆனால் யாரோ விளையாடுகிறார்கள் என வாட்ச்மேன் பேசாமல் விட்டு விட்டார். சிறிதுநேரத்தில் மீண்டும் போன் வந்தது. குண்டு வெடிக்கப் போகிறது என்று போனில் பேசியவர் மீண்டும் கூறியுள்ளார்.
இதையடுத்து ராஜேந்திரன் கல்லூரி நிர்வாகிகளுக்குத் தகவல் கொடுத்தார். போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்தனர். சோதனை நடத்தினர். பள்ளிக்கும், கல்லூரிக்கும் விடுமுறை விடப்பட்டது.
இந்தத் தகவல் பின்னர் வதந்தியாக பரவி பல்வேறு பள்ளிகளுக்கும் சென்றது. இதனால் கடலூரே ஆடிப் போனது. பெற்றோர்கள் பள்ளிகளுக்கு விரைந்தனர். பிள்ளைகளை வெளியே அனுப்புமாறு வற்புறுத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பெற்றோர்கள் போராட்டம் காரணமாக புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி, பெரிய கங்கணாங்குப்பத்தில் உள்ள செயின்ட் ஆன்டனி பள்ளி, சொரக்கல்பட்டில் உள்ள செயின்ட் மேரீஸ் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளிதான். மக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். கடலூர் நகர் முழுவதும் ஜீப்புகளில் போலீஸார் சுற்றி வந்து இதைத் தெரிவிக்கவும் செய்தனர்.
யாராவது மாணவர் ஒருவரே இந்த விஷமத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகிறார்கள். போனில் மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்க தற்போது போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.